நல்வரவு

வணக்கம் !

Monday 11 April 2016

என்னைக் கவர்ந்த பதிவுகள்-3 தொடர் பதிவு


இந்த ஆண்டில் 285 பதிவுகள் என்ற இலக்கு நிர்ணயித்துக்கொண்டு, குடும்பமாக செயல்படும் எங்கள் பிளாக் வலைப்பூ, நான் விரும்பித் தொடரும் பதிவர்களில் ஒன்று. 

ஞாயிறு துவங்கி சனி வரை ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பு என வரையறுத்துக் கொண்டு, அந்தந்த நாளில் அதற்கான பதிவுகளைத் தவறாமல் இவர்கள் வெளியிடுவதைப் பார்த்து, நான் வியந்திருக்கிறேன்.  சனிதோறும் வெளியாகும் பாசிட்டிவ் செய்திகள் அவ்வப்போது நம்மை ஆட்கொள்ளும் மனச்சோர்விலிருந்து நம்மை விடுவித்துப் புத்துணர்வு அளிக்கவல்லவை.   

கேட்டு வாங்கிப் போடும் கதை என்ற தலைப்பில் பத்திரிக்கைகளில் வெளியான கதைகளைப் பதிவர்களிடமிருந்து வாங்கி, செவ்வாயன்று இவர்கள் வெளியிடுவது வரவேற்கக்கூடிய அம்சம்.  

சென்ற வாரம் ஜோக்காளி தளத்தின் பகவான்ஜி அவர்கள் எழுதிய 'என்று தீரும் இந்த மூட்டையின் தொல்லை?' என்ற நகைச்சுவை கதையைப் படித்து ரசித்துச் சிரித்தேன். 

வரலாற்று நிகழ்வுகளைக் கூட உப்புச்சப்பின்றி வெறும் வரட்டுச் செய்தியாகச் சொல்லாமல், கதை வடிவில் சஸ்பென்ஸ் வைத்துச் சொல்லி வாசிப்புச் சுவை கூட்டுவதில் வல்லவர், சகோதரர் கரந்தை ஜெயக்குமார்.

என்னைக் கவர்ந்த இவர் பதிவுகளில் சில:-


புதுகை பதிவர் விழாவில் ‘வித்தகர்கள்,’ என்ற நூலை இவர் வெளியிடும் போது இவரைச் சந்தித்தது, மகிழ்வான தருணம்.   இது இவரின் ஆறாவது நூல் என்றறிய வியப்பு! 

தம் ஓய்வூதியம் முழுவதையும் செலவிட்டுத் திருச்சி அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி, வள்ளுவமாய் வாழ்ந்து வரும் முனைவர் புலவர் இரா.இளங்குமரனார்,

ஒரே நாளில் வேலையைப் பறிகொடுத்துப் பாதிப்புக்குள்ளான  எல்.ஐ.சியின் பத்தாயிரம் முழுநேர தற்காலிக ஊழியர்கள் சார்பாக வாதாடி, அவர்கள் குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த மனிதநேய வழக்கறிஞர் திரு ஆர்.சிங்காரவேலன்,

பிறந்த மண்ணுக்காக ராணுவ சேவை முடித்துத் தென் துருவத்திலிருந்து கல் எடுத்து வந்து, தம் பிறந்த ஊரான  சன்னாநல்லூரில் அகத்தூண்டுதல் பூங்கா மற்றும் நூலகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கர்னல் பா.கணேசன்,

தம் வாழ்நாள் சேமிப்பு முழுதையும் செலவிட்டு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொக்கிஷங்களை அரிதின் முயன்று தேடிச் சேமித்து ‘ஞானாலயா,’ என்ற பெயரில், புதுக்கோட்டையில் புத்தகங்களுக்காக ஆலயம் அமைத்திருக்கும் திரு பா.கிருட்டினமூர்த்தி தம்பதியினர், 

கண்பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்ட போதிலும், எங்களால் மற்றவர்க்கு நிகராக அனைத்துப்பணிகளையும் திறம்படச் செய்யமுடியும் என்று சாதித்துக்காட்டும் மாற்றுத்திறனாளி முனைவர் வெற்றிவேல் முருகன்,

ஆகியோரின் சாதனைகளைப் பட்டியலிடும் இந்நூலினை அன்பளிப்பாக அவரிடமிருந்து பெற்றவுடன், ஒரே மூச்சில் வாசித்துவிட்டேன்.  இச்சாதனையாளர்கள் பற்றிய குறிப்புகளை, ஆவணப்படுத்துவதே, இந்நூலின் முக்கிய நோக்கம்.  

அடுத்ததாக, தஞ்சையம்பதி என்ற வலைப்பூவில் பக்திரசம் சொட்டச் சொட்ட திரு துரை செல்வராஜு அவர்கள் எழுதும் ஆன்மீகப்பதிவுகள், வாசிப்போர் உள்ளத்தை ஆக்ரமித்து நெக்குருக வைப்பவை.  இவருடைய பதிவுகளில், இயற்கை, மற்றும் பெண் முன்னேற்றம் ஆகியவை குறித்த இவர் சிந்தனைகள், என்னை வெகுவாகக் கவர்ந்தவை.


மாதங்கம் என்றேன் - அனைத்துலக யானைகள் தினமான ஆகஸ்ட் 12ல் அந்தகக்கவி வீரராகவரின் அருமையான தமிழ்ப்பாடலுடன் துவங்கி, இலக்கியத்தில் யானை பற்றிச் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைத் தொகுத்தளித்தது சிறப்பு;  கூடவே யானையின் வாழ்விடத்தைக் கபளீகரம் செய்த மனிதனின் சுயநலத்தையும் சாடத் தயங்கவில்லை.  

கரிக்குருவி-1 கரிச்சான் குருவியைப் பற்றிய எண்ணற்ற செய்திகளை அறிந்து கொள்ள உதவிய பதிவினை, நான் மிகவும் ரசித்து வாசித்தேன்.

குருவி குருவி  அழிந்து வரும் சிட்டுக்குருவி பற்றிய விழிப்புணர்வூட்டும் பதிவு.
தமிழ் விக்கிப்பீடியாவில் 250 பதிவுகளுக்கு மேல் எழுதிச் சாதனை படைத்திருக்கும் முனைவர் திரு ஜம்புலிங்கம் ஐயா அவர்களும், நான் தொடரும் பதிவர்களில் முக்கியமானவர். 

சோழ நாட்டில் பெளத்தம் என்ற இன்னொரு வலைப்பூவில், புத்தர் சிலைகள் கிடைக்கும் இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு  களப்பணி செய்து, இவர் எழுதும்  புத்தர் சிலைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், சோழ நாட்டில் பெளத்தம் பற்றிய வரலாறு எழுத மிகவும் உதவக்கூடியவை.  

அண்மையில் அமெரிக்கா கியூபா நட்பு பற்றிய புளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு  என்று இவர் எழுதிய கட்டுரை, தமிழ் ஹிந்துவில் வெளியாகியிருக்கிறது.  பிடல் காஸ்ட்ரோ பற்றி நாம் அறியாத பல வரலாற்றுச் செய்திகளை எளிய தமிழில் விளக்கியிருக்கிறார்.      


“காலந்தோறும் தமிழனுக்குத் தம் மொழியைவிட பிறமொழிகள் மீதே பற்று மிகுதியாக இருந்துள்ளது. அதன் காரணமாகவே அவன் அடிமையாக வாழ்ந்து வந்துள்ளான், வாழ்ந்து வருகிறான். 

அன்றைய தமிழனுக்கும், இன்றைய டமிலனுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.இன்றைய டமிலன் Tamil என்று தான் தன் மொழியைக் குறிப்பிடுகிறான். Thamizh என்று அழைக்க மறுக்கிறான்.

தமிழ் மொழியை வேறு யாரும் வந்து அழிக்கவேண்டாம்; நம் தமிழனே போதும்.  போர்த்துகீஸியம், பிரெஞ்சு, இந்தி, மலாய், இசுபானியம், பிரேசிலியன், பெர்ஸியம், சமஸ்கிருதம் மராட்டி, இலத்தின்,உருது, ஆங்கிலம் என்னும் எல்லா மொழிகளும் இவன் வாயில் வருகிறது. இவன் தாய் மொழி மட்டும் வர மறுக்கிறது. இவன் வாயில் அமிலத்தை ஊற்றினால் என்ன?

பிறமொழியைக் கற்று வை.
உன் தாய் மொழி மீது பற்று வை”
 
என்பது ஏன் இவனுக்குப் புரியாமல் போகிறது.

என்று வேதனையோடு, நம் அன்னை மொழிக்காகக் குரல் கொடுக்கும் வேர்களைத் தேடி முனைவர் இரா குணசீலன் அவர்கள் பதிவுகளில், என்னை வெகுவாகக் கவர்ந்தவை:-


இத்தொடர் எழுதக் காரணமான அண்ணன் முத்துநிலவன் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி, இதனை  முடிக்கிறேன்.

இதனைத் தொடரச் சொல்லி, நான் அழைக்கும் பதிவர்கள்:-
1.    கீதமஞ்சரி – கீதா மதிவாணன்
2.    பாலமகி பக்கங்கள் - மகேஸ்வரி

நன்றியுடன்
ஞா.கலையரசி

(நன்றி படம் இணையம்)

33 comments:

  1. என் 'என்று தீரும் இந்த மூட்டையின் தொல்லை?'கதையினை ரசித்து ,குறிப்பிட்டதற்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும், த.ம வாக்குக்கும் நன்றி பகவான்ஜி! ஊமைக்கனவுகள் தளத்தில் நகைச்சுவையாக தாங்கள் அளிக்கும் பின்னூட்டங்களை ஏற்கெனவே படித்து ரசித்திருக்கிறேன். கதையாகப் படித்தது இது தான் முதல் முறை! கதை நகைச்சுவை இழையோட ரசிக்கும் விதத்தில் இருந்தது. பாராட்டுக்கள்!

      Delete
  2. என்னைக் கவர்ந்த பதிவுகள்-3 தொடர் பதிவு பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. இதில் தாங்கள் குறிப்பிட்டுள்ள அருமையான பதிவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும், நல்வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்!

      Delete
  3. தாங்கள் சுட்டிக்காட்டிச் சிறப்பித்துள்ள பதிவர்களில், சிலரின் சில பதிவுகளை மட்டும் நானும் படித்துள்ளேன்.

    மிகவும் ஆராய்ந்து பொறுமையாகவும் அருமையாகவும்தான் தேர்ந்தெடுத்துக்கொடுத்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சுட்டியுள்ள சில பதிவுகளை நீங்களும் வாசித்திருக்கிறீர்கள் என்றறிந்து மகிழ்ச்சி சார்! அருமை எனப் பாராட்டியமைக்கு நன்றி கோபு சார்!

      Delete
  4. //இதனைத் தொடரச் சொல்லி, நான் அழைக்கும் பதிவர்கள்:-
    (1) கீதமஞ்சரி – கீதா மதிவாணன் (2) பாலமகி பக்கங்கள் - மகேஸ்வரி //

    ஆஹா, இது எல்லாவற்றையும் விட பெரும் மகிழ்ச்சி அளிக்கும் இனிமையான செய்தியாக உள்ளது. அவர்களின் பதிவுகளைக்காண மிகுந்த ஆவலுடன் இப்போதிலிருந்தே காத்திருக்கிறேன்.

    பகிர்வுக்குப் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள், மேடம்.

    நன்றியுடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்! மிகவும் மகிழ்ச்சியான விஷயம் தான். தொடரப்போகும் கீதமஞ்சரியின் அருமையான, சுவையான பதிவுக்காக உங்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். மீண்டும் தங்களுக்கு என் நன்றி!

      Delete
  5. கவர்ந்த பதிவுகள் எனும் தொடரில் தஞ்சையம்பதியினைக் குறித்ததோடு
    அதன் பதிவுகள் சிலவற்றை முன்னிறுத்திய தங்களுக்கு முதற்கண் வணக்கமும் நன்றியும்..

    அன்புடன் தொடரும் பதிவகள் வழங்கும் உற்சாகம் தான் என்னை நிலைப்படுத்துகின்றது..

    நான் அறிந்த அளவிற்கு வழங்கும் பதிவுகளையும் மனதாரப் பாராட்டி தூண்டுகோலாக விளங்கும் அன்பு நெஞ்சங்களை இத்தருணத்தில் நெஞ்சார
    நினைக்கக் கடமைப்படுள்ளேன்..

    இன்னும் சிறப்பாகச் செயல்படுவதற்கு அன்னைத்தமிழ் துணை நிற்பதாக!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை சார்! சுவாரசியமான எழுத்துக்குச் சொந்தக்காரர் நீங்கள், இன்னும் சிறப்பாகச் செயல்பட என் பதிவு உங்களுக்கு உற்சாகமூட்டுகிறது என்றறிய மகிழ்ச்சி! தொடர்ந்து கரிச்சான் குருவி போன்ற பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். மிகவும் நன்றி சார்!

      Delete
  6. தொடர் பதிவில்- உங்களைக் கவர்ந்த பதிவர்கள் அருமை, அருமை,,, நானும் விரும்பித் தொடரும் பதிவர்கள்,,

    ஆங் ஆஹா நான் தொடருனுமா?? சரிமா நீங்க சொல்லி கேட்காமல் இருக்க முடியுமா? எழுதிட்டா போச்சு,,, ஆனா கொஞ்சம் காலஅவகாசம் வேண்டும்,,
    தொடர்கிறேன், அழைப்பிற்கு நன்றிமா,,

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகி! என் அழைப்பை உடனெ மனமுவந்து ஏற்றுக்கொண்டமைக்கு மிகவும் நன்றி. பொறுமையாக நேரங் கிடைக்கும் போது தொடருங்கள். நான் குறிப்பிட்டுள்ள பதிவர்களை நீங்களும் விரும்பித் தொடர்கிறீர்கள் என்றறிய மகிழ்ச்சி. நன்றி மகி!

      Delete
  7. என்னைக் கவர்ந்த பின்னூட்டக்காரர்கள் என்று யார் எப்பொழுது எழுதப் போகிறார்களோ, தெரியவில்லை.

    இதுவரை பதிவுலகில் யாரும் எழுதாதது. யாரும் எழுதவில்லை என்பதால் நானே எழுதிவிடலாமோ என்று அடிக்கடி தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார்! உண்மையில் பின்னூட்டங்கள் தாம் நம்மை உற்சாகப்படுத்தி மென்மேலும் எழுதத் தூண்டுகின்றன. எனவே என்னைக் கவர்ந்த பின்னூட்டக்காரர்கள் என்று எழுதுவது பயனுள்ளதாய் இருக்கும். புதுமையாயும் இருக்கும். நீங்களே எழுதலாம். எனக்குத் தெரிந்தவரை திரு கோபு சாருக்குக் கிடைப்பது போன்ற நீண்ட சுவையான பின்னூட்டங்கள் வேறு யாருக்கும் கிடைப்பதில்லை. எனவே அவர் இத்தலைப்பில் எழுத மிகவும் பொருத்தமானவர். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சார்!

      Delete
  8. பல புதிய பதிவர்களை அறிந்து கொள்ள முடிந்தது.ஒவ்வொரு அறிமுகத்தோடும் அந்த வலைப்பக்கத்தில் பிடித்த அம்சங்களையும் சுட்டியிருப்பது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோபி! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  9. நண்பர்களின் வலைப்பூக்களோடு எனது வலைப்பூக்களையும் அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்ச்சி. நன்றி. ஒவ்வொரு நண்பரின் தளத்தையும் பற்றி நன்கு உள்வாங்கி, அருமையாகப் பகிர்ந்துள்ள விதம் மிகவும் அருமை. இன்னும் தொடர்ந்து எழுத இவைபோன்ற ஊக்கமான எழுத்துகள் உதவும். அறிமாகியுள்ள பிற நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா! மிகவும் அருமை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி!

      Delete
  10. உங்களை கவர்ந்த பதிவுகள் மட்டும் அல்ல
    எங்களையும் கவர்ந்த பதிவுகள்தான்....
    வாழ்த்துக்கள் தொடர்க பதிவுகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அஜய்!

      Delete
  11. நன்றி எங்களையும் குறிப்பிட்டுள்ளதற்கு. நண்பர் கரந்தை ஜெயக்குமார், முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, தஞ்சையம்பதி நண்பர் துரை செல்வராஜ் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      Delete
  12. நான் விரும்பும் பதிவர்களின் தளங்கள் பற்றியும், அவர்களின் படைப்புகள் பற்றியும் அறிய தந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க செந்தில்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  13. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து! நன்றி!

    ReplyDelete
  14. தொடர்வதற்கு என்னை அழைத்தமைக்கு மிகவும் நன்றி அக்கா. இந்தப் பதிவில் தாங்கள் குறிப்பிட்டுள்ள தங்கள் மனம் கவர்ந்த பதிவர்கள் பலரும் நானும் தொடரும் பதிவர்களே என்று அறிய மிகவும் மகிழ்ச்சி. பலரையும் தாங்கள் இங்கே அறிமுகப்படுத்திவிட்டதால் பதிவுலகில் அதிகம் அறியப்படாத பதிவர்களையும் பதிவுகளையும் அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். விரைவில் தொடர்வேன்.

    ReplyDelete
    Replies
    1. அழைத்தவுடன் ஒப்புக்கொண்டமைக்கு மிகவும் நன்றி கீதா! அதிகம் அறியப்படாத பதிவுகளை நீ அறிமுகப்படுத்தினால் மிகவும் நல்லது. அது தான் இத்தொடர் பதிவின் முக்கிய நோக்கமும் கூட. ஆவலுடன் பதிவை எதிர்பார்க்கிறேன். மீண்டும் நன்றி!

      Delete
  15. இந்த எளியேனையும் நினைவில் கொண்டு
    பதிவில் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றியினை மகிழ்வினைத்
    தெரிவித்துக் கொள்கின்றேன் சகோதரியாரே
    என்றும் வேண்டும் இந்த அன்பி
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  16. நிறையச் செய்திகள் அறிந்தேன் , மிக்க நன்றி .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  17. பலர் புதிய பதிவர்கள் அறியத் தந்தமைக்கு நன்றிகள் அருமையான பதிவு ! நன்றி ! நலம் தானே தோழி
    !

    ReplyDelete
  18. “பிறமொழியைக் கற்று வை - உன்
    தாய் மொழி மீது பற்று வை” - அடைமொழி நல்லா இருக்கே !!!

    ReplyDelete