நல்வரவு

வணக்கம் !

Monday 11 April 2016

என்னைக் கவர்ந்த பதிவுகள்-3 தொடர் பதிவு


இந்த ஆண்டில் 285 பதிவுகள் என்ற இலக்கு நிர்ணயித்துக்கொண்டு, குடும்பமாக செயல்படும் எங்கள் பிளாக் வலைப்பூ, நான் விரும்பித் தொடரும் பதிவர்களில் ஒன்று. 

ஞாயிறு துவங்கி சனி வரை ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பு என வரையறுத்துக் கொண்டு, அந்தந்த நாளில் அதற்கான பதிவுகளைத் தவறாமல் இவர்கள் வெளியிடுவதைப் பார்த்து, நான் வியந்திருக்கிறேன்.  சனிதோறும் வெளியாகும் பாசிட்டிவ் செய்திகள் அவ்வப்போது நம்மை ஆட்கொள்ளும் மனச்சோர்விலிருந்து நம்மை விடுவித்துப் புத்துணர்வு அளிக்கவல்லவை.   

கேட்டு வாங்கிப் போடும் கதை என்ற தலைப்பில் பத்திரிக்கைகளில் வெளியான கதைகளைப் பதிவர்களிடமிருந்து வாங்கி, செவ்வாயன்று இவர்கள் வெளியிடுவது வரவேற்கக்கூடிய அம்சம்.  

சென்ற வாரம் ஜோக்காளி தளத்தின் பகவான்ஜி அவர்கள் எழுதிய 'என்று தீரும் இந்த மூட்டையின் தொல்லை?' என்ற நகைச்சுவை கதையைப் படித்து ரசித்துச் சிரித்தேன். 

வரலாற்று நிகழ்வுகளைக் கூட உப்புச்சப்பின்றி வெறும் வரட்டுச் செய்தியாகச் சொல்லாமல், கதை வடிவில் சஸ்பென்ஸ் வைத்துச் சொல்லி வாசிப்புச் சுவை கூட்டுவதில் வல்லவர், சகோதரர் கரந்தை ஜெயக்குமார்.

என்னைக் கவர்ந்த இவர் பதிவுகளில் சில:-


புதுகை பதிவர் விழாவில் ‘வித்தகர்கள்,’ என்ற நூலை இவர் வெளியிடும் போது இவரைச் சந்தித்தது, மகிழ்வான தருணம்.   இது இவரின் ஆறாவது நூல் என்றறிய வியப்பு! 

தம் ஓய்வூதியம் முழுவதையும் செலவிட்டுத் திருச்சி அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி, வள்ளுவமாய் வாழ்ந்து வரும் முனைவர் புலவர் இரா.இளங்குமரனார்,

ஒரே நாளில் வேலையைப் பறிகொடுத்துப் பாதிப்புக்குள்ளான  எல்.ஐ.சியின் பத்தாயிரம் முழுநேர தற்காலிக ஊழியர்கள் சார்பாக வாதாடி, அவர்கள் குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த மனிதநேய வழக்கறிஞர் திரு ஆர்.சிங்காரவேலன்,

பிறந்த மண்ணுக்காக ராணுவ சேவை முடித்துத் தென் துருவத்திலிருந்து கல் எடுத்து வந்து, தம் பிறந்த ஊரான  சன்னாநல்லூரில் அகத்தூண்டுதல் பூங்கா மற்றும் நூலகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கர்னல் பா.கணேசன்,

தம் வாழ்நாள் சேமிப்பு முழுதையும் செலவிட்டு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொக்கிஷங்களை அரிதின் முயன்று தேடிச் சேமித்து ‘ஞானாலயா,’ என்ற பெயரில், புதுக்கோட்டையில் புத்தகங்களுக்காக ஆலயம் அமைத்திருக்கும் திரு பா.கிருட்டினமூர்த்தி தம்பதியினர், 

கண்பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்ட போதிலும், எங்களால் மற்றவர்க்கு நிகராக அனைத்துப்பணிகளையும் திறம்படச் செய்யமுடியும் என்று சாதித்துக்காட்டும் மாற்றுத்திறனாளி முனைவர் வெற்றிவேல் முருகன்,

ஆகியோரின் சாதனைகளைப் பட்டியலிடும் இந்நூலினை அன்பளிப்பாக அவரிடமிருந்து பெற்றவுடன், ஒரே மூச்சில் வாசித்துவிட்டேன்.  இச்சாதனையாளர்கள் பற்றிய குறிப்புகளை, ஆவணப்படுத்துவதே, இந்நூலின் முக்கிய நோக்கம்.  

அடுத்ததாக, தஞ்சையம்பதி என்ற வலைப்பூவில் பக்திரசம் சொட்டச் சொட்ட திரு துரை செல்வராஜு அவர்கள் எழுதும் ஆன்மீகப்பதிவுகள், வாசிப்போர் உள்ளத்தை ஆக்ரமித்து நெக்குருக வைப்பவை.  இவருடைய பதிவுகளில், இயற்கை, மற்றும் பெண் முன்னேற்றம் ஆகியவை குறித்த இவர் சிந்தனைகள், என்னை வெகுவாகக் கவர்ந்தவை.


மாதங்கம் என்றேன் - அனைத்துலக யானைகள் தினமான ஆகஸ்ட் 12ல் அந்தகக்கவி வீரராகவரின் அருமையான தமிழ்ப்பாடலுடன் துவங்கி, இலக்கியத்தில் யானை பற்றிச் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைத் தொகுத்தளித்தது சிறப்பு;  கூடவே யானையின் வாழ்விடத்தைக் கபளீகரம் செய்த மனிதனின் சுயநலத்தையும் சாடத் தயங்கவில்லை.  

கரிக்குருவி-1 கரிச்சான் குருவியைப் பற்றிய எண்ணற்ற செய்திகளை அறிந்து கொள்ள உதவிய பதிவினை, நான் மிகவும் ரசித்து வாசித்தேன்.

குருவி குருவி  அழிந்து வரும் சிட்டுக்குருவி பற்றிய விழிப்புணர்வூட்டும் பதிவு.
தமிழ் விக்கிப்பீடியாவில் 250 பதிவுகளுக்கு மேல் எழுதிச் சாதனை படைத்திருக்கும் முனைவர் திரு ஜம்புலிங்கம் ஐயா அவர்களும், நான் தொடரும் பதிவர்களில் முக்கியமானவர். 

சோழ நாட்டில் பெளத்தம் என்ற இன்னொரு வலைப்பூவில், புத்தர் சிலைகள் கிடைக்கும் இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு  களப்பணி செய்து, இவர் எழுதும்  புத்தர் சிலைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், சோழ நாட்டில் பெளத்தம் பற்றிய வரலாறு எழுத மிகவும் உதவக்கூடியவை.  

அண்மையில் அமெரிக்கா கியூபா நட்பு பற்றிய புளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு  என்று இவர் எழுதிய கட்டுரை, தமிழ் ஹிந்துவில் வெளியாகியிருக்கிறது.  பிடல் காஸ்ட்ரோ பற்றி நாம் அறியாத பல வரலாற்றுச் செய்திகளை எளிய தமிழில் விளக்கியிருக்கிறார்.      


“காலந்தோறும் தமிழனுக்குத் தம் மொழியைவிட பிறமொழிகள் மீதே பற்று மிகுதியாக இருந்துள்ளது. அதன் காரணமாகவே அவன் அடிமையாக வாழ்ந்து வந்துள்ளான், வாழ்ந்து வருகிறான். 

அன்றைய தமிழனுக்கும், இன்றைய டமிலனுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.இன்றைய டமிலன் Tamil என்று தான் தன் மொழியைக் குறிப்பிடுகிறான். Thamizh என்று அழைக்க மறுக்கிறான்.

தமிழ் மொழியை வேறு யாரும் வந்து அழிக்கவேண்டாம்; நம் தமிழனே போதும்.  போர்த்துகீஸியம், பிரெஞ்சு, இந்தி, மலாய், இசுபானியம், பிரேசிலியன், பெர்ஸியம், சமஸ்கிருதம் மராட்டி, இலத்தின்,உருது, ஆங்கிலம் என்னும் எல்லா மொழிகளும் இவன் வாயில் வருகிறது. இவன் தாய் மொழி மட்டும் வர மறுக்கிறது. இவன் வாயில் அமிலத்தை ஊற்றினால் என்ன?

பிறமொழியைக் கற்று வை.
உன் தாய் மொழி மீது பற்று வை”
 
என்பது ஏன் இவனுக்குப் புரியாமல் போகிறது.

என்று வேதனையோடு, நம் அன்னை மொழிக்காகக் குரல் கொடுக்கும் வேர்களைத் தேடி முனைவர் இரா குணசீலன் அவர்கள் பதிவுகளில், என்னை வெகுவாகக் கவர்ந்தவை:-


இத்தொடர் எழுதக் காரணமான அண்ணன் முத்துநிலவன் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி, இதனை  முடிக்கிறேன்.

இதனைத் தொடரச் சொல்லி, நான் அழைக்கும் பதிவர்கள்:-
1.    கீதமஞ்சரி – கீதா மதிவாணன்
2.    பாலமகி பக்கங்கள் - மகேஸ்வரி

நன்றியுடன்
ஞா.கலையரசி

(நன்றி படம் இணையம்)