நல்வரவு

வணக்கம் !

Sunday 29 July 2012

புது மனைவி


கையில் கலக்கிக் கொடுத்த பானம்
இன்னதென்று யூகிக்க இயலாவிடினும்
ஏதோ ஓர் அனுமானத்தில்
புது மனைவியைக் குளிர்விக்க எண்ணி
தேநீர் மிகப் பிரமாதம், என்றேன்;.
அது புரூ காபிப்பா, என்றாள் அவள்,
இது கூடத் தெரியவில்லையே என்ற
ஏளனத்தை முகத்தில் தேக்கியபடி!

உப்பும், மிளகாய்த் தூளும்
வஞ்சனையின்றி வாரி வழங்கி
அம்மணி சமைத்த சாப்பாட்டை
விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல் நான் தவிக்க,
சிரமப்பட்டு நான் செஞ்ச சமையலை
வாயைத் தொறந்து,  ரெண்டு வார்த்தை
பாராட்டினா  முத்தா விழுந்துடும்?
பாராட்டவும் ஒரு மனசு வேணும்,
அது ஒங்கக்கிட்ட இல்லை, என்றாள்
முகத்தை ஒன்றரை முழம்
தூக்கி வைத்துக் கொண்டு!

வேறொரு நாள்... 
சமையலில் கை தேர்ந்து விட்டாய்;
இன்று உன் சமையல் அருமை என்றேன்;
சமைத்தது உங்க ளம்மா;
தெரிந்து கொண்டே, வேண்டுமென்று
என்னைக் வெறுப்பேற்றுகிறீர்என்றாள்,
கடுகு வெடிக்கும் முகத்துடன்!

மனைவியின் பிறந்த நாளை
அரும்பாடுபட்டு நினைவில் நிறுத்தி
பத்துக் கடை ஏறி இறங்கி
ஆசையாய் வாங்கிப் பரிசளித்த
பச்சை வண்ணப் புடவையைத்
தூக்கி ஓரத்தில் வைத்தாள்,
ஒங்களுக்குத் தேர்வு செய்யவே
தெரியலை, என்ற விமர்சனத்துடன்!
இங்கிலீஷ் கலர்(!?) தான் பிடிக்குமாம் அவளுக்கு!

சினிமா ஆசைப்பட்டாள் என்பதற்காக
வரிசையில் நின்று அடிபட்டு, மிதிபட்டு
புதுப்படத்தின் முதல் நாள் காட்சிக்கு
டிக்கெட் வாங்கி வந்தால்,
பாழாய்ப்போன இப்படத்துக்கு வந்ததுக்குக்
கடற்கரைக்காவது போயிருக்கலாம்;
படுமட்டம் ஒங்க ரசனை,என்றாள்
படம் பார்த்து முடித்த பிறகு!

இவளைத் திருப்திப்படுத்த முடியாது
என்றவுண்மை எனக்கு உறைத்த போது,
வெட்ட வெளியில் நின்ற வண்ணம்
என்னைப் பிடிக்காதவளாக
இருந்துவிட்டுப் போடி! என்று
வாய் விட்டுக் கத்தினேன்,
அவள் பக்கத்தில் இல்லையென்பதை
உறுதி செய்து கொண்டு!

(தமிழ் மன்றத்தில் எழுதியது)

Wednesday 18 July 2012

’அதிர்ஷ்டம்’ - ஒரு நிமிடக்கதை

அன்றைய படப்பிடிப்பில் கதாநாயகனுக்குத் தங்கையாக நடிக்க வேண்டிய நடிகை வராமல் போகவே,  பத்தோடு பதினொன்றாக குரூப் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த புவனாவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.

அந்தப் படத்தின் டைரக்டர் மாலன் ஏற்கெனவே ஏழெட்டுப் படங்கள் எடுத்துச் சிறந்த டைரக்டர் என்று பெயர் வாங்கியவர்.

"இந்த டைரக்டர் படத்துல, அதுவும் கதாநாயகனுக்குத் தங்கச்சி வேடம், அதிர்ஷ்டக்காரி தான்டி நீ" என்று சக நடிகைகள் வாழ்த்துத் தெரிவிக்கவே, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றாள் புவனா.

எத்தனையோ நாள் கண்ட கனவு இன்று நனவாகியிருக்கிறது, இந்த வாய்ப்பை மிக நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவளது உள்மனது சொல்லவே, உயிரைக் கொடுத்து நடித்தாள்.

"ம். நல்லா நடிக்கிறியே, இவ்ளோ நல்லா நடிப்பேன்னு நான் எதிர்பார்க்கல" என்று டைரக்டர் பாராட்டியபோது, வசிஷ்டர் வாயிலிருந்து கிடைத்த பாராட்டு எனப் புளகாங்கிதமடைந்தாள் அவள்.

"இந்தப் படம் வெளிவந்தவுடனே  பெரிய ஸ்டார் ஆயிடுவே, எங்களையெல்லாம் கொஞ்சம் ஞாபகம் வைச்சுக்கம்மா"
என்று தோழிகள் கிண்டல் செய்ய, கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கலானாள். 

கதாநாயகியாக அவளிடம் கால்ஷீட் கேட்டு, முன்பணம் கொடுக்க அவள் வீட்டு ஹாலில், படத் தயாரிப்பாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது போல் அவளுக்கு அடிக்கடி கனவு வரத் துவங்கியது.

படம் வெளியான அன்று தம் தோழிகள் புடை சூழ, தியேட்டருக்குச் சென்று, தான் நடித்த காட்சிகள் எப்போது வரும் என ஆவலோடு காத்திருந்தாள்.  ஆனால் படம் முடியும் வரை அந்தக் காட்சிகள் வரவேயில்லை.

எடிட்டிங்கில் அவளது அந்தத் தங்கை பாத்திரமே, கத்தரிக்கோலுக்கு இரையாகி உயிரை விட்டிருந்தது.

Sunday 1 July 2012

உண்ணாவிரதம்- சிறுகதை


மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாய் இருப்பதால், குறுவை சாகுபடிக்கு அணையைத் திறக்க வாய்ப்பில்லை எனத்  தமிழக அரசு கையை விரித்து விட்டது. 

நடந்து முடிந்திருந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் டெபாசிட் தொகையை இழந்து மண்ணைக் கவ்வியிருந்த 'அகில உலகத் தமிழர் நலன் காக்கும் கழகம்' என்ற அமைப்பின் தலைவர் மாடசாமிதம் கட்சியின் செல்வாக்கைப் பெருக்க, காவிரி நதி நீர்ப் பிரச்சினை உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் வேளாண் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்தார்.

போராட்டத்தின் முதல் கட்டமாக ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். 
"கொலஸ்டிரால் எக்கச் சக்கமாக ஏறியிருக்குது.  உடம்பைக் குறைக்கணும்னு டாக்டர் வற்புறுத்திச் சொல்லிக்கிட்டேயிருக்காரு.  நீங்க என்னடான்னா இந்த வயசிலேயும் வாயைக் கட்டாம எதையாவது தின்னுக்கிட்டேயிருக்கீங்க",என்ற மனைவிமார்களின் இடைவிடாத முணுமுணுப்பு தான் அந்த முடிவுக்குக் காரணம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!  உண்ணாவிரதம் இருப்பதால், வேளாண் மக்களின் ஆதரவு கிட்டும்அதே சமயம், வயிற்றுக்குக் கட்டாய ஓய்வு கொடுப்பதால், உடம்பு எடையும் கொஞ்சம் குறையும்.

நிறைய செலவு பண்ணி மக்கள் கூட்டத்தைக் கூட்டி, பேரணிக்கு ஏற்பாடு செய்தவர், தமது ஒரு நாள் உண்ணாவிரதம் பற்றி அறிவிப்பதற்காக மேடை ஏறினார்.  கூடியிருந்த எழுச்சிமிக்க மக்கள் வெள்ளத்தைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு, 'ஒரு நாள் உண்ணாவிரதம்' என்பதற்குப் பதிலாகச் 'சாகும் வரை உண்ணாவிரதம்' என்று வாய் தவறிச் சொல்லி விட்டார். 

"காவிரி மன்ற உத்தரவுப்படி 192 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகா விடமிருந்து மத்திய அரசு பெற்றுத் தரவேண்டும்; இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்" என்ற அவரது அதிரடி அறிவிப்பைக் கேட்டுக் கூடியிருந்த மக்கள் செய்த கரகோஷம் விண்ணைப் பிளந்தது.  அப்போதுதான் தாம் செய்த தவறு, அவருக்குப் புரிந்து என்ன செய்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்தார்.

"தமிழக விவசாய மக்களின் துயர் துடைக்கத் தம் இன்னுயிரை ஈவதற்கு முன் வந்திருக்கும் நம் தலைவரின் தியாகம் மகத்தானது," என்றும் 'தியாகச் செம்மல்' என்றும் அடுத்து வந்தவர்கள் அவரை வானளாவப் புகழ்ந்து பேசவேறு வழியின்றி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டிய தாயிற்று.

இந்த அறிவிப்பைக் கேட்ட மற்றக் கட்சித் தலைவர்கள், ஏதோ நகைச்சுவை துணுக்கைக் கேட்டவர் போல் நகைத்து விட்டு, 'இது வெறும் அரசியல் ஸ்டண்ட்' என்று கிண்டல் செய்தனர்.

துவக்க நாளன்று மூக்குப் பிடிக்கத் தின்று விட்டு, உண்ணாவிரதத்துக்குத் தயாரானார் மாடசாமி.  வயது எழுபதுக்கு மேல் ஆகிவிட்டதால், எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்தில், டாக்டர் குழு ஒன்றை மேடைக்கு அருகில் இருக்கச் செய்தார்.  அக்குழு அவ்வப்போது அவரது உடல் நிலையைப் பரிசோதித்து உண்ணாவிரதத்தை எவ்வளவு நாட்கள் நீட்டலாம் என ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தது.
    
உட்கார்ந்திருக்க முடியாமல் மேடையில் ஒரு படுக்கை தயார் செய்து, படுத்துக் கொண்டார் தலைவர்.  அவருக்குப் பணிவிடை செய்ய வலப்பக்கத்தில் ஒருவரும், இடப்பக்கத்தில் ஒருவரும், தலைமாட்டில் ஒருவருமாக அவரது மனைவிமார்கள் வீற்றிருந்தனர்.  

'கிழவனுக்கு ஏதாவது நேருமுன், பாகப்பிரிவினை செய்யாமல் பாக்கியிருக்கும் சொத்துக்களை எழுதி வாங்கி விடவேண்டும்,' என்ற எண்ணத்தில் ஆளாளுக்குத் தனித்தனியே வக்கீல்களை வரவழைத்திருந்தனர்.  

தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று, இவரது உண்ணாவிரதத்தை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது.

'எதிர்க்கட்சி சார்புடைய இச்சேனல், இவருடைய உண்ணாவிரதத்தை ஒளிபரப்ப என்ன காரணம்?' என்று எல்லோரும் முடியைப் பிய்த்துக் கொள்ளாத குறை.

உண்மையில், சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தவர், இடை நேரத்தில் எதுவும் சாப்பிட்டால் கையுங் களவுமாகப் பிடிக்கலாம் என்றெண்ணி ஒரு நிமிடம் கூட கண்ணயராமல், பகல், இரவு என 'ஷிப்ட்' முறையில் வேலை செய்தனர், அதன் பணியாளர்கள்.  எனவே இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் ஏதாவது சாப்பிடலாம் என்ற அவரது நினைப்பிலும் மண் விழுந்தது.

இரண்டாம் நாளிலிருந்து பசி தாங்க முடியாமல் அவதிப்பட்டார் தலைவர்.  மனிதாபிமான முறையில் மற்றக் கட்சித் தலைவர்கள் யாரேனும் வந்து சொன்னால், 'அது தான் சாக்கு' என்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம் என ஆவலாகக் காத்திருந்தார். தம் தொண்டர்கள் மூலம் தலைவர்கள் சிலரை தம்மைப் பார்க்க வரச் சொல்லி தூது அனுப்பினார்.    ஆனால் இவரது உண்ணாவிரதத்தை யாருமே 'சீரியஸாக' எடுத்துக் கொள்ளாததால், இவரைப் பார்க்க யாருமே வரவில்லை.

மத்திய அரசோ, கர்நாடக அரசோ இவரது உண்ணாவிரதத்தைச் சட்டை செய்யவேயில்லை.

நான்கு நாட்களில் படுத்த படுக்கையாகி விட்டார்.  பசி மயக்கத்தில் பார்வை மங்கியது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணெதிரே, எமனின் எருமை வாகனம் வந்து நிற்பது போல் தோன்றவே, பயந்து கொண்டு கண்களைக் கெட்டியாக மூடிக் கொண்டார்.

"என்னமோ தெரியலடா, கண்ணைத் தொறந்து என்னைப் பார்க்கிறதுக்கே உங்கப்பா நடுங்கிறாரு," என்று முதல் மனைவி தன் பையனிடம் சொன்னபோது தான், நிற்பது எமன் வாகனம் அல்ல என்ற விஷயம் அவருக்கு விளங்கியது.

கஷ்டப்பட்டுக் கண்களைத் திறந்த போது, மனைவிமார்கள் மூவரும் ஏதோதோ பத்திரங்களைக் கொண்டு வந்து கையெழுத்துப் போடச் சொல்லி கட்டாயப்படுத்தினர்.  அதற்குப் பயந்து கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டார்.

மாடசாமியின் அரசியல் வாரிசு யார் என்பதிலும், யார் பெரிய தாதா என்பதிலும் அவரது பிள்ளைகளிடையே நடந்த யுத்தத்தில், அப்பாவிகள் சிலர் கொல்லப்பட்டனர். 

இதற்கு மேல் உண்ணாவிரதத்தை நீட்டித்தால், உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று டாக்டர்கள் சொல்லிவிடவே என்ன செய்யலாம் எனத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவருக்குத் தொலைக்காட்சியின் அந்த அறிவிப்பு தேனாக வந்து காதில் பாய்ந்தது.

'தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்துள்ளது.  மேலும் சில இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது" என்ற வானிலை அறிக்கை தான் அந்த அறிவிப்பு.

"என் கோரிக்கையையேற்று இயற்கை அன்னையே மழை பெய்யச் செய்துவிட்டாள்.  வறண்டு கிடந்த காவிரியில்  தண்ணீர் வந்து விட்டதால், என் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன்" என்று மகிழ்ச்சிப் பொங்க அறிவித்தார் மாடசாமி!.   
.

(23/11/2009 ல் தமிழ் மன்றத்தில் எழுதியது)